ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு கொரோனா தடுப்பூசி போட காத்திருக்கும் பொதுமக்கள்


ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு கொரோனா தடுப்பூசி போட காத்திருக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 Jun 2021 7:50 PM GMT (Updated: 23 Jun 2021 7:50 PM GMT)

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள் முன்பு பொதுமக்கள் காத்திருப்பதுடன், பற்றாக்குறை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள் முன்பு பொதுமக்கள் காத்திருப்பதுடன், பற்றாக்குறை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

காத்திருக்கும் பொதுமக்கள்

பொள்ளாச்சி அருகே கிராமப்புறங்களில் உள்ள சமத்தூர், கஞ்சம் பட்டி, ரெட்டியாரூர், வளந்தாயமரம், பெத்தநாயக்கனூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

 ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தினமும் 100 தடுப்பூசி மருந்துகள் தான் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிகிறது. 

அதுவும் சில நாட்களில் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. 

பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு பொதுமக்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள் 

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 100 முதல் 200 தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனால் தடுப்பூசி போட 500-க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். 

பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும்போது மன உளைச்சல் ஏற்படுகிறது. 

குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதால் நகர்புறங்களில் வார்டு, வாரியாக பிரித்தும், ஒன்றிய பகுதிகளில் பேரூராட்சி, ஊராட்சிகள் வாரியாக பிரித்தும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தலாம். 

டோக்கன் 

இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வந்து காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் இதுகுறித்து ஒரு நாளைக்கு முன்பாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி தடுப்பூசி போடலாம். இதன் மூலம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story