புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் மணிகளை சூழ்ந்த மழைநீர்

புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் பெய்த மழையால் நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஆகவே, நெல் மூட்டைகளை பாதுகாக்க மேற்கூரை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
Published on

அன்னவாசல்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அன்னவாசல் சுற்றுப் பகுதிகளில் இயங்கி வரும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் முன்பு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

அன்னவாசல் வட்டத்திற்கு உட்பட்ட 650 எக்டேர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் மணிகளை பெரும்பாலான விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகாடு

இதேபோல, வடகாடு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அனவயல் எல்.என்.புரத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், இந்த நெல் கொள்முதல் நிலையம் திறந்து ஓரிரு நாட்கள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கொள்முதல் செய்யப்படவில்லை. தற்போது இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்து குவித்து வைத்துள்ள நெல் குவியல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

கொட்டகை

ஆகவே, இனிவரும் நாட்களில் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பும் ஆஸ்பெட்டாசால் ஆன மேற்கூரை அமைத்து நெல்மணிகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com