3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி


3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி
x
தினத்தந்தி 19 July 2021 5:36 PM GMT (Updated: 19 July 2021 5:36 PM GMT)

என்.எல்.சி. தொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தில் 3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி அளித்ததோடு, அதற்கான பட்டியலையும் தலைவர் ராக்கேஷ்குமார் வெளியிட்டார்.

நெய்வேலி, 

தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொழிலக கூட்டுறவு சேவை சங்கம் மற்றும் அலுவலக பராமரிப்பு சேவை சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக பணியாற்றும் தொழிலாளர்கள், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பணிகளை  மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்குவது தொடர்பாக 1947-ம் ஆண்டின் தொழிற்தகராறு சட்டத்தில் உள்ள 12(3) பிரிவின் கீழ் உடன்படிக்கையானது, என்.எல்.சி. இந்தியா நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்ததாரர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்கள் சார்ந்துள்ள தொழிற்சங்கங்களுக்கும் கடந்த 7.08.2020 அன்று கையெழுத்தானது.

உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த உடன்படிக்கையில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளில் என்.எல்.சி. தொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தின் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக அதிகரிப்பது எனவும், இதற்கான பட்டியல் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் அமைப்பது எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது.
எனவே ஒப்பந்த ஊழியர்களை என்.எல்.சி. தொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்க்கான நடைமுறைகளை கண்டறிய என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலில் இருந்து 3 ஆயிரத்து 509 தொழிலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

பட்டியல் வெளியீடு 

இது தொடர்பாக நெய்வேலி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன மனிதவள இயக்குனர் ஆர்.விக்ரமன், செயல் இயக்குனர் என்.சதீஷ்பாபு மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ராக்கேஷ்குமார் 3 ஆயிரத்து 509 தொழிலாளர்களின் பட்டியலை வெளியிட்டார். 
இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைவர் வெற்றிவேல், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் தேவானந்தன், அலுவலக செயலாளர் ஜோதி, என்.எல்.சி. தொழிலக கூட்டுறவு சேவைகள் சங்க மேலாண் இயக்குனர் சீராளசெல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story