

அரவக்குறிச்சி
குடிநீர் தட்டுபாடு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமான் கூடலூர் கீழ்பாக்கம் ஊராட்சி ஊத்துக்கரைப்பட்டியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக இப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் குடிநீர் 10 நாட்கள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது. அதிலும், ஒரு குடும்பத்திற்கு 5 குடம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
காலிக்குடங்களுடன் வந்து மனு
இதையடுத்து நேற்று காலை ஊத்துக்கரைப்பட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கனகராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க வசதி செய்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.
இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.