கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற வழக்கில் காதலனுடன் பெண் கைது


கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற வழக்கில் காதலனுடன் பெண் கைது
x
தினத்தந்தி 19 July 2021 9:49 PM GMT (Updated: 19 July 2021 9:49 PM GMT)

கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற பெண் 9 மாதத்திற்கு பிறகு காதலனுடன் போலீசில் சிக்கினார்.

மைசூரு: கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற பெண் 9 மாதத்திற்கு பிறகு காதலனுடன் போலீசில் சிக்கினார். 

வாலிபருடன் கள்ளத்தொடர்பு

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா  உனசூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராஜூ (வயது 50). இவருக்கும் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெல்லிகெரே கிராமத்தை சேர்ந்த உமாவுக்கும் (28) என்பவருக்கும் கடந்த10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

கணவன்-மனைவி இடையே 22 வயது வித்தியாசம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் உமா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டர். அப்போது தனது பக்கத்து வீட்டு வாலிபரான அவினாஷ் (28) என்பவருடன் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

தூக்க மாத்திரை கலந்த காபி

இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி வெங்கடராஜூவுக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இருப்பினும் உமா, அவினாசுடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார். 

இதனால் உமாவுடன் வெங்கடராஜூ அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் வெங்கடராஜூவை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 9-10-2020 அன்று வெங்கடராஜூவை உமா தனது தாய் வீட்டுக்கு வரவழைத்து காபியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். 

மூச்சு திணறடித்து கொலை

இதனால் காபி குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அங்கு வந்த அவினாசுடன் சேர்ந்து தலையணையால் வெங்கடராஜூவின் முகத்தை அமுக்கி மூச்சை திணறடித்து உமா கொலை செய்துள்ளார். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள ஒருகிணற்றில் அவரது உடலை தூக்கி வீசியுள்ளனர். 

மறுநாள் தனது கணவரை காணவில்லை என கூறியுள்ளார். பின்னர் அவரது உடல் கிணற்றில் கிடப்பது கிராம மக்களுக்கு தெரியவந்ததும், வெங்கடராஜூ தற்கொலை செய்து கொண்டதாக உமா நாடகமாடியுள்ளார். ஆனால் பிரேதப் பரிசோதனையில் வெங்கடராஜூவுக்கு காபியில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்திருப்பதும், அவரது உடலில் கட்டையால் தாக்கிய காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. 

காதலனுடன் பெண் கைது

இதையடுத்து போலீசாருக்கு, உமா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் உமா தனது காதலன் அவினாசுடன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர்கள் 9 மாதங்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 
மேற்கண்ட தகவலை மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேத்தன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Next Story