கர்நாடகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் பதிவு


கர்நாடகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் பதிவு
x
தினத்தந்தி 20 July 2021 8:44 PM GMT (Updated: 20 July 2021 8:44 PM GMT)

கர்நாடகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மருத்துவ சிகிச்சை

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 456 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,464 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 86 ஆயிரத்து 702 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் 29 பேர் வைரஸ் தொற்றுக்கு இறந்த நிலையில், பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 226 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 2,706 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 24 ஆயிரத்து 197 ஆக உயர்ந்து உள்ளது. 26 ஆயிரத்து 256 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

50-க்கும் கீழ் பதிவு

புதிதாக பெங்களூருவில் 352 பேர், தட்சிண கன்னடாவில் 200 பேர், மைசூருவில் 117 பேர், ஹாசனில் 108 பேர் உள்பட 29 மாவட்டங்களில் 1,464 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். கொப்பலில் மட்டும் புதிதாக யாரும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

மைசூருவில் 5 பேர், தட்சிண கன்னடா, ஹாசன், மைசூருவில் தலா 3 பேர், ஹாவேரி, கோலார், மண்டியா, துமகூருவில் தலா 2 பேர், பெலகாவி, சிக்பள்ளாப்பூர், தார்வார், கலபுரகி, குடகு, சிவமொக்கா, உடுப்பியில் தலா ஒருவர் என 29 பேர் இறந்தனர். 15 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் பதிவாகி உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story