கண்மாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்-ஆய்வுக்கூட்டத்தில் மாங்குடி எம்.எல்.ஏ. உறுதி


கண்மாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்-ஆய்வுக்கூட்டத்தில் மாங்குடி எம்.எல்.ஏ. உறுதி
x
தினத்தந்தி 20 July 2021 9:10 PM GMT (Updated: 20 July 2021 9:10 PM GMT)

தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் மாங்குடி எம்.எல்.ஏ. உறுதி அளித்து உள்ளார்.

தேவகோட்டை,

தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் மாங்குடி எம்.எல்.ஏ. உறுதி அளித்து உள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

தேவகோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய அளவிலான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் அடங்கிய வளர்ச்சி பணிக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு காரைக்குடி தொகுதி மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
யூனியன் தலைவர் பிர்லா கணேசன் முன்னிலை வகித்து பேசும் போது:- மத்திய, மாநில அரசுகளின் நிதியை கொண்டு தேவகோட்டை ஒன்றியம் முழுவதும் அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் பணிகள் நிறைய செய்ய வேண்டியது உள்ளது.இதற்கு சட்டமன்ற உறுப்பினர் தமது நிதியிலிருந்தும், அரசிடமிருந்தும், கூடுதல் நிதிகளை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

ஊதியம் வழங்கவில்லை

தி.மு.க. கவுன்சிலர் நாகனிரவி பேசும் போது:-
மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில்ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் பேசும் போது,
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத போது அதிகாரிகள் தன்னிச்சையாக ஆவாஸ் பிளஸ் திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் ஒதுக்கி உள்ளனர்.ஆனால் உண்மையிலேயே வீடு இல்லாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக ஊராட்சிமன்ற தலைவர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.

கண்மாய்கள் தூர்வார நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து மாங்குடி எம்.எல்.ஏ. ேபசும் போது, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் கலெக்டர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேவகோட்டை ஒன்றியத்தில் 32 ஆண்டுகளாக கண்மாய் பராமரிப்பு இல்லை. அந்த கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பெரி.பாலா தி.மு.க.வடக்கு ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர்கள் வக்கீல் சஞ்சய், லோகநாதன், தேவகோட்டை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் வட்டார தலைவர் பிரபாகரன், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பூங்குடி வெங்கடாசலம், மாவட்ட துணைத்தலைவர்கள் பூமிநாதன், மீரா உசேன், மாவட்ட செயலாளர் ஆறாவயல் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் சுகாதார பணிகளுக்காக வாங்கப்பட்ட 3 எலக்ட்ரிக் ஆட்டோக்களையும், மற்றும் சைக்கிள் ஆட்டோக்களையும் பயன்பாட்டுக்காக எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் ஆணையாளர் (பொறுப்பு) மதுசூதனன் உள்பட நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story