விளாத்திகுளம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பலி


விளாத்திகுளம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பலி
x
தினத்தந்தி 21 July 2021 1:22 PM GMT (Updated: 21 July 2021 1:22 PM GMT)

விளாத்திகுளம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக பலியானார்.

விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக பலியானார்.
மீனவர்
விளாத்திகுளம் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தினை சேர்ந்த மீனவர் பிரான்சிஸ். இவர் நேற்று அதிகாலையில் அங்குள்ள மீனவர்களுடன் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் சென்றதும், நாட்டுபடகில் இருந்த தெர்மகோலினால் செய்யப்பட்ட சிறிய படகினை வைத்து கணவாய் மீன்பிடிக்க தொடங்கியுள்ளார். 
கடலில் தவறி விழுந்தார்
மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது தீடீரென காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் மீன்பிடித்து கொண்டு இருந்த பிரான்சிஸ் நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்த மீனவர்களும் பிரான்சிசை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் கடலின் அடிப்பகுதிக்கு சென்றுவிட்டதால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை சிறிது நேரத்தில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர் அவரது உடலை தேடும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதையெடுத்து மீனவர்கள் வேம்பார் கடற்கரை போலீஸ் நிலையத்திற்கும், சூரங்குடி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். 
உடல் மீட்பு
இதையெடுத்து போலீசார் முத்துக்குளிக்கும் மீனவர்களை வரவழைத்து பிரான்சிஸ் உடலை தேடும் பணியில் ஈடுபட வைத்தனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் அவரது உடலை கண்டுபிடித்து மீட்டனர். இதனை தொடர்ந்து அவரது உடலை பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேம்பார் கடற்கரை போலீசார் மற்றும் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story