மகன் இறந்த வேதனையில் விஷம் குடித்த தொழிலாளி சாவு-மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை


மகன் இறந்த வேதனையில் விஷம் குடித்த தொழிலாளி சாவு-மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 21 July 2021 6:29 PM GMT (Updated: 21 July 2021 6:29 PM GMT)

மகன் இறந்த வேதனையில் விஷம் குடித்த தொழிலாளி பலியானார். இவருடைய மனைவி, மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளிபாளையம்:
3 பேர் விஷம் குடித்தனர்
பள்ளிபாளையம் ஐந்துமெத்தை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா. இந்த தம்பதிக்கு யசோதா என்ற மகளும், பரத்வாஜ் என்ற மகனும் இருந்தனர். பரத்வாஜ் கடந்த ஆண்டு விபத்தில் பலியானார். இதனால் சீனிவாசன் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தனர். அடிக்கடி அவர்கள் நாமும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பரத்வாஜின் முதலாமாண்டு நினைவு தினத்தை குடும்பத்தினர் கடைபிடித்தனர். இந்தநிலையில் பரத்வாஜின் இறப்பினால் மனவேதனையில் இருந்த சீனிவாசன் சம்பவத்தன்று தனது மனைவி நித்யா, மகள் யசோதா ஆகியோருக்கு விஷம் கொடுத்தார். பின்னர் அவரும் விஷத்தை குடித்தார்.
தொழிலாளி பலி
இதனால் வீட்டில் மயங்கி கிடந்த அவர்கள் 3 பேரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு திவீர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் இறந்தார்.  நித்யா, யசோதாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த துக்கத்தில் மனைவி, மகளுடன் விஷம் குடித்த தொழிலாளி, இறந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story