குமரியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


குமரியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 21 July 2021 8:46 PM GMT (Updated: 21 July 2021 8:46 PM GMT)

குமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
சிறப்பு தொழுகை
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகிய 2 பண்டிகைகளை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதே போல குமரி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து மசூதிக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
அதாவது, நாகர்கோவில், திங்கள்நகர், திருவிதாங்கோடு, தக்கலை, குளச்சல், களியக்காவிளை, கடையாலுமூடு, தேங்காப்பட்டணம், ஆளூர், கன்னியாகுமரி, திட்டுவிளை, மாதவலாயம், குலசேகரம், இரவிபுதூர்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
பக்ரீத் வாழ்த்துக்கள்
நாகர்கோவிலை பொறுத்த வரை கோட்டார், இடலாக்குடி, வடசேரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் வெளியூர்களில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக பக்ரீத் வாழ்த்துக்களை அனுப்பி மகிழ்ந்தனர். தொழுகை முடிந்ததும் வீடுகளில் சுவையான பிரியாணி சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. பிரியாணி உணவை அண்டை வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று முன்தினமே பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story