வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு: கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு


வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு: கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 July 2021 9:04 PM GMT (Updated: 21 July 2021 9:04 PM GMT)

பெங்களூருவில் நடந்த வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் கூட்டாக கற்பழிப்பு

பெங்களூரு ராமமூர்த்திநகர் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் அந்த இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தார்கள். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்திருந்தது. இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் உள்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது பெங்களூரு கோர்ட்டில் ராமமூர்த்திநகர் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கைதான 11 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து இளம்பெண்களை கடத்துவது, இந்தியாவில் உள்ள இளம்பெண்களை கடத்தி விற்பனை செய்வது, விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

13 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த விவகாரத்தை மத்திய உள்துறையினர் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு(என்.ஐ.ஏ.) மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், என்.ஐ.ஏ. அதிகாரிகள், வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு குறித்து ராமமூர்த்திநகர் போலீசாரிடம் தகவல்களை பெற்றுள்ளனர். கைதான 13 பேருக்கும் இந்தியாவில் பல பகுதிகளில் இளம்பெண்களை கடத்தி, விற்பனை செய்ததில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன் கைதானவர்கள் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையடுத்து, கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளம்பெண்கள், குழந்தைகள் அகியோரை கடத்தி, விற்பனை செய்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story