ரெயிலில் கடத்த முயன்ற 44 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்த முயன்ற 44 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 22 July 2021 3:31 PM GMT (Updated: 22 July 2021 3:31 PM GMT)

ரெயிலில் கடத்த முயன்ற 44 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரெயிலில் சோதனை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 


இந்த ரெயில் நேற்று காலை 8 மணியளவில் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 1 ஏ நடைமேடைக்கு வந்து நின்றது. 

அப்போது கோவை ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு அதிகாரி கள், அந்த ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.

 அங்கு, சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் அமர்ந்து இருந்தனர். அவர் களிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

கஞ்சா கடத்தல்

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பெரிய பையை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் பெரிய அளவில் 15 பாக்கெட்டுகளில் 44 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

உடனே அந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து அதிகாரிகள் அந்த 2 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கி ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை (வயது 51), கதிரேசன் (35) என்பதும், அவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

 இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சா மற்றும் பிடிபட்ட 2 பேரும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் செல்லத்துரை, கதிரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பிடிபட்டது எப்படி?

இது குறித்து கோவை ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறும்போது, கைதான செல்லத்துரை திருச்சூருக்கும், கதிரேசன் பாலக்காடுக்கும் ரெயில் மூலம் கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. 

கோவை ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்ததும், ஒரு பெட்டியில் இருந்து கஞ்சா வாசனை வந்தது. 

உடனே  அந்த பெட்டிக்குள் சோதனை நடத்தி 2 பேரை பிடித்து கஞ்சாவை பறிமுதல் செய்தோம். அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் என்றனர்.


Next Story