நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு


நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 July 2021 5:01 PM GMT (Updated: 22 July 2021 5:01 PM GMT)

தவணை கட்டாததால் வீட்டிற்கு பூட்டு போட்ட நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கம்மாபுரம், 

கம்மாபுரம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள் (வயது 32). இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். மேலும் மாதத்தவணையாக ரூ.4,900 கட்டி வந்தார். ஆனால் கடந்த 2 மாதமாக தவணையை அவர் கட்டவில்லை. இதனால் அருளின் வீட்டிற்கு சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அங்கிருந்த அவரது 2 மகன்களை வெளியேற்றிவிட்டு கதவை மூடி பூட்டு போட்டனர். மேலும் வீட்டில் நோட்டீசும் ஒட்டிச்சென்றனர்.  இதனால் அவமானம் தாங்க முடியாமல் அருள் மனைவி ஐஸ்வர்யா, வீட்டில் போட்டு இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நிதி நிறுவன ஊழியர்களின் நடவடிக்கையை கண்டித்து அருளின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக கம்மாபுரம் போலீசில் அருள் புகார் கொடுத்தார். அதன்பேரில் நிதி நிறுவன ஊழியர்களான தைவ்பியாஸ், சரவணன், கார்த்தி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story