பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்று வாலிபர் தற்கொலை


பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்று வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 22 July 2021 9:54 PM GMT (Updated: 22 July 2021 9:54 PM GMT)

குன்னம் அருகே பட்டதாரி பெண்ணை ஆயுதத்தால் குத்திக்கொன்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

குன்னம்:

ஒருதலைக்காதல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருடைய மனைவி மகேஸ்வரி, மகள் தனலட்சுமி(வயது 22). பட்டதாரி. மகேஸ்வரியின் தாய் வீடு, குன்னம் அருகே கொளப்பாடி கிராமத்தில் உள்ளது. தனலட்சுமி, தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள வீட்டை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அருண்பாண்டியன்(30). இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். அருண்பாண்டியனின் தாய்-தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற தனலட்சுமியை பார்த்த அருண்பாண்டியன், அவரை ஒருதலையாக காதலித்து வந்தார். இதைத்தொடர்ந்்து அவர் தனது கையில் தனலட்சுமியின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.
பெண் தர மறுத்தார்
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனலட்சுமி வீட்டிற்கு அருண்பாண்டியன் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார். அப்போது, அருண்பாண்டியன் தாய், தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்ததால், அவருக்கு பெண் தர முருகேசன் மறுத்துள்ளார்.
இந்நிலையில் கொளப்பாடி கிராமத்தில் கோவில் திருவிழாவில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக நேற்று மகேஸ்வரி, தனலட்சுமி ஆகியோரை, அவர்களது உறவினரான ஆகாஷ்(22) தனது மோட்டார் சைக்கிளில் அல்லிநகரத்தில் இருந்து கொளப்பாடிக்கு அழைத்து வந்தார். வழியில் மருதையன் கோவில் என்ற இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனலட்சுமி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
குத்திக்கொலை
பின்னர் அவர்கள் கொளப்பாடி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையே மருதையன் கோவிலில் தனலட்சுமியை, அருண்பாண்டியன் பார்த்துள்ளார். அப்போது, தனக்கு தர மறுத்த பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில், தனலட்சுமியை கொலை செய்ய அருண்பாண்டியன் முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து தனது கோழிப்பண்ணையில் பாம்பை குத்திக்கொல்வதற்காக வைத்திருந்த ஈட்டி போன்ற சுருக்கி என்ற ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில், தனலட்சுமியை பின்தொடர்ந்து வந்தார். அரியலூர்- திட்டக்குடி சாலையில் வெண்மணி கிராமத்தில் உள்ள கரும்புக்காடு அருகில் சாலையின் வளைவில் உள்ள இரண்டாவது வேகத்தடையில் மெதுவாக சென்றபோது, அருண்பாண்டியன் தான் வைத்திருந்த சுருக்கியால் தனலட்சுமியின் இடதுபுற முதுகில் குத்தினார். இதில் தனலட்சுமி படுகாயம் அடைந்து துடிதுடித்தார். இதையடுத்து அவரை அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தற்கொலை
இதற்கிடையே தனலட்சுமியை கொலை செய்ததால் தன்னை சும்மா விடமாட்டார்கள் என்று எண்ணிய அருண்பாண்டியன், சின்ன வெண்மணி கிராமத்தில் தனக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தனலட்சுமியின் முதுகை துளைத்த சுருக்கி, இதயத்தில் பட்டதில் அவர் படுகாயமடைந்து இறந்திருக்கலாம், என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தனலட்சுமியின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், அருண்பாண்டியனின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சோகம்
அருண்பாண்டியன், தனலட்சுமியை பெண் கேட்டு வந்த விவரம் கூட அந்தப் பெண்ணுக்கு தெரியாது என்றும், அநியாயமாக அவரை அருண்பாண்டியன் கொலை செய்து விட்டதாகவும் கூறி உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
திருமணம் செய்து தர மறுத்ததால் காதலித்த பெண்ணை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story