மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ்


மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ்
x
தினத்தந்தி 22 July 2021 9:54 PM GMT (Updated: 22 July 2021 9:54 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தனர்.

அரியலூர்:
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு, கடந்த 19-ந்தேதி அரசின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகள் மூலம் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை நேற்று முதல் அரசின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 11 மணி முதல் அரசின் இணையதள முகவரியில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நகர்ப்பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய விவரத்தை பதிவு செய்து பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொண்டு, நகல் எடுத்து கொண்டனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு சரியான இணையதள வசதியும், நகல் எடுக்கும் வசதியும் இல்லாததால், அவர்கள் பயின்ற பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மூலம் தங்களது பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் வரை உயர்கல்வி சேருவதற்கு மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Next Story