மறைமுக ஏலத்தில் ரூ.36 லட்சத்திற்கு பருத்தி விற்பனை


மறைமுக ஏலத்தில் ரூ.36 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 22 July 2021 9:54 PM GMT (Updated: 22 July 2021 9:54 PM GMT)

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் ரூ.36 லட்சத்திற்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்:

அதிகபட்சமாக ரூ.7,525-க்கு...
பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் நேற்று பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அரியலூர் மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர். இதில் அதிபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,525-க்கு விலை போனது.
குறைந்தபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.6,910-க்கும், சராசரி போக்கு விலையாக பருத்தி குவிண்டால் ரூ.7,200-க்கும் விலை போனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 500 குவிண்டால் பருத்தி 250-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மறைமுக ஏலம் மூலம் ரூ.36 லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்து கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் ஜெயக்குமார், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன், மேற்பார்வையாளர் அழகுதுரை மற்றும் விற்பனைக்கூட பணியாளர்கள் செய்திருந்தனர்.
மறைமுக ஏலம்
மேலும் பிரதிவாரம் வியாழக்கிழமைதோறும் ஜெயங்கொண்டம் வேளாண்மை விற்பனை கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெறும். அதனால் விவசாயிகள் அவசரப்படாமல் தங்களின் பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும். அதோடு பருத்தியை நன்கு உலரவைத்து விற்பனைக்கு எடுத்து வர வேண்டும் என்று விற்பனை கூட அதிகாரிகள் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம் வேளாண்மை விற்பனை கூடத்திற்கு நேற்று வரப்பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.7,189, எள் (80 கிலோ) ரூ.8,206.

Next Story