திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி


திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 July 2021 7:26 AM IST (Updated: 23 July 2021 7:26 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முதன்மை கல்வி அலுவலக சூப்பிரண்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் குப்பம்மா சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 52). இவர் தனது மகனுக்கு கல்வித்துறையில் லேப் அசிஸ்டென்ட் அரசு வேலை வேண்டி விண்ணப்பித்து இருந்தார்.

இதை தொடர்ந்து அவர் திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நாடி தன்னுடைய மகனுக்கு வேலை கிடைக்க உதவி புரியுமாறு கேட்டார்.

திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணிபுரியும் திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்த சலாவுதீன் கல்வித்துறையில் லேப் அசிஸ்டென்ட் வேலை வாங்கி தர வேண்டுமானால் ரூ. 8 லட்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஜானகிராமன், சலாவுதீனிடம் ரூ.8 லட்சத்தை கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர் இதுநாள் வரை வேலை வாங்கி தராமல் அலைக்கழித்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட ஜானகிராமன் பலமுறை அவரை தொடர்பு கொண்டும் அவர் சரியான பதில் கூறாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது சலாவுதீன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது. சலாவுதீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் தாலுகா போலீசில் ஜானகிராமன் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக உள்ள சலாவுதீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
1 More update

Next Story