2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கேரளா, மராட்டியம் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை


2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கேரளா, மராட்டியம் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை
x
தினத்தந்தி 23 July 2021 6:08 AM GMT (Updated: 23 July 2021 6:08 AM GMT)

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழுடன் வந்தால் கேரளா, மராட்டியத்துக்கு விமானத்தில் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூா் மற்றும் மராட்டிய மாநிலம் மும்பை, புனே, அவுரங்காபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்களில் பயணிப்பவா்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன்தான் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் உள்ளது.

தற்போது இந்த கட்டுப்பாட்டில் தளா்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழ்களுடன் சென்னையில் இருந்து கேரளா, மராட்டிய மாநிலங்களுக்கு விமானத்தில் பயணிக்கலாம். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர தேவை இல்லை.

ஆனால் 2 டோஸ் தடுப்பூசி போடாதவா்கள், தாங்கள் விமான பயணம் செய்யும் நேரத்தில் இருந்து 72 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடனேயே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனா்.

இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவுபடி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Next Story