ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு  8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 23 July 2021 4:44 PM GMT (Updated: 23 July 2021 4:44 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
கனமழை
கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. 
மீண்டும் தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நேற்று திறந்து விடப்பட்டுள்ளது. 
இந்த தண்ணீர் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story