``அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை''


``அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை
x
தினத்தந்தி 23 July 2021 5:01 PM GMT (Updated: 23 July 2021 5:01 PM GMT)

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் ``அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்தார்.

புதுக்கோட்டை, ஜூலை.24-
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் ``அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்தார்.
போலீசார் சோதனை
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் ரொக்கம், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம், நிருபர்கள் கேட்டபோது அவர் விளக்கமளித்தார்.
பழிவாங்கும் நோக்கம் இல்லை
அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்பது நாங்கள் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில் தெரியவரும். யார் தவறு செய்துள்ளார்களோ அதற்கான ஆதாரங்களை திரட்டுகிறார்கள். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்படுகிறது. எந்தவொரு அப்பாவி மீதும் சோதனை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எந்தவொரு சோதனையும் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது. எதிர்க்கட்சியையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட ஒரு அரசியல் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவார். நிச்சயமாக நாங்கள் பழிவாங்கும் நோக்கத்தில் எதுவும் செய்யவில்லை. தீவிரமாக விசாரித்து திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் சோதனை நடைபெறுகிறது. அடிப்படையில் தவறு இல்லையென்றால் சோதனை நடத்தப்படுவதில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக கவர்னரிடம் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறோம். அந்த ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குகள் பதியப்படும். ஆதாரம் இல்லையென்றால் வழக்குகள் பதியப்படமாட்டாது..
இவ்வாறு அவர் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் புகைப்படம்
இதேபோல தனது அலுவலகத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறுகையில், அவர் மீதான பாசத்தில் புகைப்படத்தை வைத்திருந்ததாகவும், அதனை எடுக்க முதல்-அமைச்சர் தெரிவித்ததின் பேரில் எடுக்கப்பட்டதாகவும், எந்த விமர்சனங்களுக்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Next Story