சென்னை ரெயில்வே கோட்டம் ஒரே மாதத்தில் ரூ.17.95 கோடி வருவாய் ஈட்டியது

சென்னை ரெயில்வே கோட்டம் ஒரே மாதத்தில் ரூ.17.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் கடந்த ஜூலை மாதம், ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. கடந்த மாதத்தில் சென்னை ரெயில்வே கோட்டம், 75 சரக்கு ரெயில்களை இயக்கி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.17.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் 32 ரெயில்கள் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்தும், 43 ரெயில்கள் மேல்பாக்கம் சரக்கு பணிமனையிலிருந்தும் இயக்கப்பட்டன. மொத்தம் 1,950 வேகன்களில் ஆட்டோமொபைல் சரக்குகள் ஏற்றப்பட்டன. சென்னை ரெயில்வே கோட்டம், இதுவரை ஒரே மாதத்தில் கையாண்ட ஆட்டோமொபைல் போக்குவரத்துக்கான சரக்கு ரெயில்கள் மற்றும் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியனவற்றுள் இதுவே மிக அதிகமானதாகும்.
இதுவரை கடந்த மார்ச் மாதத்தில் கையாளப்பட்ட 74 சரக்கு ரெயில்களே ஒரு மாதத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரெயில்களுக்கான அதிகபட்ச எண்ணிக்கையாக கருதப்பட்டது. இந்த சாதனையை சென்னை ரெயில்வே கோட்டம் ஜூலை மாதத்தில் முறியடித்துள்ளது. சென்னை ரெயில்வே கோட்டம், சரக்கு பணிமனைகளை புதிய வசதிகளுடன் மேம்படுத்தியதன் விளைவாக, புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கண்ட தகவலை சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






