

வேலூர்
நகை- பணம் கொள்ளை
வேலூர் சத்துவாச்சாரி, டபுள்ரோட்டை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 63). ஓய்வுபெற்ற பெல் நிறுவன அதிகாரி. இவர் தனது சித்தப்பா, சித்தி மற்றும் மனைவி மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 31-ந் தேதி உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ஸ்ரீராம்நகருக்கு சென்றிருந்தார். வீட்டில் சித்தப்பா மணி (74), சித்தி துளசி (67) ஆகியோர் மட்டும் இருந்தனர்.
மாலையில் பிச்சாண்டி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டில் இருந்த லாக்கரை காணவில்லை. மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து லாக்கரை தூக்கிச் சென்றது அவர்களுக்கு தெரியவந்தது. அதில் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பிச்சாண்டி சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கூறுகையில் வீட்டில் நகை மற்றும் பணத்தை சிறிய அளவிலான இரும்பு லாக்கரில் வைத்துள்ளனர். அந்த லாக்கரை டி.வி. மேசைக்குள் வைத்திருந்தனர். மர்மநபர்கள் யாரோ வீட்டுக்குள் புகுந்து அந்த லாக்கரை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். பிச்சாண்டியின் வீடு குறித்த தகவல்கள் அறிந்த நபர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும்.
எனவே சமீபத்தில் அவரின் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் அந்த தெருவில் மற்றொரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகிறோம். அதில் சந்தேகப்படும் படியாக ஒரு பெண் தலையில் துணியை சுற்றிக் கொண்டு ஏதோ ஒரு பொருளை தூக்கிச் செல்வது பதிவாகி உள்ளது. அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். திருடப்பட்ட நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.