தனிநபருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி


தனிநபருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி
x
தினத்தந்தி 2 Aug 2021 5:53 PM GMT (Updated: 2 Aug 2021 5:53 PM GMT)

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் தனிநபருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.

சிவகங்கை,

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் தனிநபருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.

ரூ.15 லட்சம்

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பொது கால கடன் திட்டம் மற்றும் தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
இது போல் பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகும்.

சுயஉதவிக்குழு

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதமாகும். 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதமாகும்.
இந்த திட்டங்களில் கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பம்

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story