

விராலிமலை,
விராலிமலை தாலுகா சித்தகுடிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ விவசாய கிணற்றில் 2 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் அந்த மானை மீட்டு விராலிமலை கால்நடை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதனைத்தொடர்ந்து அந்த புள்ளி மானை விராலிமலை சரக வனவர் கருப்பையாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்த மானை ஒரத்தநாடு தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே புள்ளி மான் பரிதாபமாக இறந்தது.