கேரட், வாழை இலை விலை உயர்வு


கேரட், வாழை இலை விலை உயர்வு
x
தினத்தந்தி 5 Aug 2021 1:43 PM GMT (Updated: 5 Aug 2021 1:43 PM GMT)

கேரட், வாழை இலை விலை உயர்வு

கோவை, ஆக.6-
கோவையில் கேரட் மற்றும் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.

டி.கே.மார்க்கெட்

கோவையில் உள்ள டி.கே. மார்க்கெட்டில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன. 

இங்கு சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து காய்கறிக ளை வாங்கி செல்கின்றனர். 

இந்த நிலையில் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட் நேற்று ரூ.80-க்கு விற்கப்பட்டது.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ஊட்டியில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக, கேரட் விரைவில் அழுகி விடுகிறது. 

இதனால் வரத்து குறைந்ததால் விலை அதிகமாகி உள்ளது. இந்த விலை உயர்வு ஒரு சில வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

வாழை இலை விலை உயர்வு

இதேபோல் நேற்று வாழை இலை விலையும் உயர்ந்தது. வழக்கமாக 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

 இதன் காரணமாக தோட்டத்தில் வாழை இலைகள் கிழிந்து பெரிய அளவில் சேதம் அடைகின்றன. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் வாழைஇலை கட்டு ரூ.1000-ஆக விலை அதிகரித்துள்ளது.

இதேபோல் ரூ.3 விற்கப்பட்ட தலைவாழை ரூ.5-க்கும், ரூ.2-க்கு விற்கப்பட்ட சாப்பாடு இலை ரூ.3-க்கும் ரூ.1.50 விற்கப்பட்ட டிபன் இலை ரூ.2-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் மற்ற காய்கறிகளின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. அதன்படி ஆப்பிள் தக்காளி ரூ.10, நாட்டு தக்காளி ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.25, முள்ளங்கி ரூ.12, பீட்ரூட் ரூ.30, வெண்டைக்காய் ரூ.27-க்கு விற்பனை செய்யப்பட்டன.

இதேபோல் சின்ன மற்றும் பெரிய வெங்காயம் 4 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சில்லரைக்கு விற்பனை செய்யும் போது கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story