குடியாத்தம் அருகே போலி டாக்டர் கைது


குடியாத்தம் அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2021 5:09 PM GMT (Updated: 5 Aug 2021 5:09 PM GMT)

குடியாத்தம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தம்

திடீர் சோதனை

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோர் குடியாத்தம் பகுதியில் போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவத் துறை மற்றும் காவல் துறைக்கு அறிவுறுத்தினர்.

இதனைதொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் எம்.சித்ரா தலைமையில், மருந்தாய்வாளர் மகாலட்சுமி, மருந்தாளுநர் ஜெயலட்சுமி, குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்கரவர்த்தி, சரவணன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் நேற்று குடியாத்தம் அடுத்த ஜிட்டப்பள்ளி கிராமம் மசூதி தெருவில் திடீர் சோதனை செய்தனர்.

போலி டாக்டர் கைது

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மஸ்தான் (வயது 38) என்பவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மஸ்தானை பிடித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, போலி டாக்டர் மஸ்தானை கைது செய்தார். அவரிடம் இருந்து மருந்து, மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம் நகரப்பபகுதி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிக அளவு போலி டாக்டர்கள் உள்ளதாக வந்த தொடர் புகார்கள் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் வரும் தகவல் தெரிந்த பலர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

Next Story