பட்டானூர் நிலத்தை விற்க அனுமதிக்க வேண்டும்
புதுடெல்லி, ஆக.6-
புதுவை ரோடியர் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை விற்க அனுமதிக்க வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை விடுத்தனர்.
பட்டானூர் நிலத்தை விற்க...
புதுவை சபாநாயகர் செல்வம், உள்துறை மந்திரி நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ., சட்டசபை செயலாளர் முனுசாமி ஆகியோர் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ளனர். நேற்று அவர்கள் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்கள்.
அப்போது புதுவை ரோடியர் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை விற்க அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் 95 ஏட்டுகளுக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கவும், புதுவை போலீஸ் துறைக்கான விதிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
புதிய சட்டசபை வளாகம்
அதுமட்டுமின்றி கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க, சிறப்பு நிதி வழங்கவேண்டும். தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, உயர்கல்வி கவுன்சில் அமைப்பதற்கான மசோதா ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கவும் வலியுறுத்தினார்கள்.
முன்னதாக அவர்கள் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். அவரிடம், புதுவை மாநிலத்தில் ஒருங்கிணைந்த புதிய சட்டசபை வளாகம் கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதியுதவி கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த கடிதத்தையும் வழங்கினார்கள். கடிதத்தை பெற்றுக்கொண்ட நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து அவர்கள் நகர்புற வளர்ச்சி துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, கல்வி மற்றும் திறன்மேம்பாட்டு துறை மந்திரி தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரையும் சந்தித்து பேசினர்.

