நுண்ணீர் பாசன திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுமா பொள்ளாச்சி விவசாயிகள் எதிர்பார்ப்பு


நுண்ணீர் பாசன திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுமா பொள்ளாச்சி விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 5:07 PM GMT (Updated: 6 Aug 2021 5:07 PM GMT)

தமிழக பட்ஜெட்டில் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுமா? என்று பொள்ளாச்சி விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பொள்ளாச்சி

தமிழக பட்ஜெட்டில் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுமா? என்று பொள்ளாச்சி விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நுண்ணீர் பாசன திட்டம்

தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 வரைமுறைப்படுத்தப்படாத இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கூறுகின்றனர். ராமபட்டிணம் பகுதியில் உள்ள சின்னணை, பெரியணைகள் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வருகின்றன.

இந்த 2 அணைகளின் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் கால்வாய்கள் பராமரிப்பு பணிக்கு கடந்த 1994-ம் ஆண்டு ரூ.95 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ததாக நீர்வளத்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 ஆனால் அதன்பிறகு இதுவரைக்கும் கால்வாய் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ததாக எந்தவித ஆதாரமும் இல்லை. இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கால்வாய்களில் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது.  இதன் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நிதி ஒதுக்க வேண்டும்

இதுகுறித்து பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
தண்ணீர் இருந்தும் கால்வாய்களை சீரமைக்காமல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் பாசனத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை.

 அடையாளம் தெரியாத அளவிற்கு தற்போது பாசன கால்வாய்கள் உள்ளன. எனவே வருகிற வேளாண்மை துறை சம்பந்தப்பட்ட தமிழக பட்ஜெட்டில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு சிறப்பு கவனம் எடுக்க வேண்டும்.

மேலும் கால்வாய்களை முறையாக பராமரிக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முன் வர வேண்டும். அப்போதுதான் கால்வாய்களை சீரமைத்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். 

இதன் மூலம் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story