போலி கால்நடை டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை


போலி கால்நடை டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2021 11:32 PM IST (Updated: 6 Aug 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி கால்நடை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரித்துள்ளார்.

சிவகங்கை,

மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி கால்நடை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரித்துள்ளார்.

போலி டாக்டர்கள்

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. மீறி போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதும் அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல்.போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. மாவட்டத்தில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் எனக்கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாதகாலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால் அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள்.

கடும் நடவடிக்கை

 எனவே கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்துவர்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும். போலி மருத்துவர்கள் குறித்த தகவலை, அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனருக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கலாம்.போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், முதன் முறை ரூ.1000, இரண்டாவது முறை ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாத கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.
 இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story