பட்டாபிராம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலி


பட்டாபிராம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 8 Aug 2021 1:37 AM GMT (Updated: 8 Aug 2021 1:37 AM GMT)

பட்டாபிராம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

ஆவடி, 

ஆவடியை அடுத்த திருநின்றவூர் ராஜாங்குப்பம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சூர்யா (வயது 19). இவர், ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், கடந்த 3-ந் தேதி மாலை பட்டாபிராம் கருணாகரச்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான குன்றத்தூரைச் சேர்ந்த சண்முகம் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருநின்றவூர் அருகே கொசவன்பாளையம், பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). கூலித்தொழிலாளியான இவர், திருநின்றவூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

கொசவன்பாளையம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று ஷேர்ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர், அதில் பயணம் செய்த சுப்பிரமணி மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

3 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பலியானார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story