

தளி:
தண்ணீர் பற்றாக்குறையால் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
தரிசு நில சாகுபடி
தரிசு நில சாகுபடி என்பது முழுக்க முழுக்க பருவமழையை ஆதாரமாகக்கொண்டதாகும். ஒரு உழவு மழை பெய்த பின்பு நிலத்தை உழுது பண்படுத்தும்பணி மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் தொடர் மழை பெய்தால் சாகுபடி பணிகள் தொடங்கப்படுகிறது. குறுகிய கால பயிர்களான உளுந்து, தட்டைபயிறு, பாசிப்பயிர், கொள்ளு, எள் போன்றவை பயிரிடப்படுகிறது. எந்தவித பாசன வசதியும் இல்லாமல் பருவமழையை ஆதாரமாகக் கொண்ட இந்த சாகுபடியில் செய்யப்படும் முதலீடு மீண்டும் திரும்ப வருமா? என்பது உறுதிபடத்தெரியாது. ஒரு ரூபாய் மதிப்புள்ள முதலீடு நிலத்தில் இடும் போதே நஷ்ட கணக்கு தொடங்கிவிடுகிறது.
மழைபெய்து காப்பாற்றினால் மட்டுமே முதலீட்டுத்தொகை திரும்ப வரும். லாபமும் குறைவு. ஆனாலும் விவசாயம் செய்து பழகிய உடல் உழைப்பு இல்லாமல் இருக்காது. லாபமோ, நஷ்டமோ நிலம் லேசாக ஈரமானால் கூட சாகுபடி பணி தொடர்ந்து நடைபெறும். ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த நிலங்களில் சிறு, குறு, விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். தரிசுநில சாகுபடியில் எதிர்பார்த்தளவு விளைச்சலை ஈட்ட முடியும். காரணம் என்னவென்றால் கோடை காலத்தில் நிலம் ஓய்வெடுத்து மழைக்காலத்தில் புத்துணர்வுடன் சாகுபடிக்கு தயாராகி விடுகிறது.
விவசாயிகள் வேதனை
இந்த ஆண்டு தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை பெய்த பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதையடுத்து தரிசுநில சாகுபடியில் விவசாயிகள் முனைப்பு காட்டினார்கள். கொள்ளு, எள், உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு, நிலக்கடலை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டது. அவற்றை விவசாயிகள் முறையாக பராமரித்து வந்தனர்.
செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. தரிசு நில சாகுபடியால் அனைத்து நிலங்களும் ஏதாவது பயிருடன் பசுமையாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிர்கள் வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கருகும் நிலையில் உள்ளது. பயிர்கள் பூவும், பிஞ்சுமாக உள்ள நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வருவது விவசாயிகளை வேதனை அடையச்செய்துள்ளது.