தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 25 Feb 2022 12:41 AM IST (Updated: 25 Feb 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பூட்டியே கிடக்கும் பொது கழிப்பறைகள்
திருச்சி மாவட்டம், துவாக்குடி மலை (தெற்கு)  காமராஜர் வளைவு, செடி மலை முருகன் கோவில் தெரு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பொதுகழிப்பறைகள் கட்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை காட்சி பொருளாகவே கழிப்பறைகள் உள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் பூட்டியே கிடக்கும் கழிப்பறைகளை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், துவாக்குடி, திருச்சி.

பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சியில் அரியனாம் பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இது தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாஸ், தொட்டியம், திருச்சி.

ஊர் பெயரை மாற்றி எழுத கோரிக்கை 
திருச்சி-சிதம்பரம் இடையே புதிதாக 4 வழி சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலையானது லால்குடி அருகே உள்ள நகர்-நெய்க்குப்பை-பூவாளூர்  ஆகிய ஊர்களின் புறப்பகுதி வழியாக செல்கிறது. இதில் நெய்க்குப்பை புறப்பகுதி  சேவை சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஊர் பெயர் நெய்க்குப்பை என்று எழுவதற்கு பதிலாக தவறாக திருமங்கலம் என எழுதப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர். எனவே திருமங்கலம் என்பதை நெய்க்குப்பை என்று மாற்றி எழுத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி.

குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீருக்காக பல்வேறு தெருக்களுக்கு அலைந்து வருகின்றனர். மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், லால்குடி, திருச்சி.
1 More update

Next Story