தமிழ் பேச, எழுத கற்றுக்கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்- கலெக்டர் விஷ்ணு பேச்சு

தமிழ் பேசவும், எழுதவும் நான் கற்றுக்கொள்வதில் பெருமை அடைகிறேன் என்று நெல்லையில் நடந்த தமிழ் வளர்ச்சித்துறை ஆட்சிமொழி கருதரங்கத்தில் கலெக்டர் விஷ்ணு கூறினார்
நெல்லை:
தமிழ் பேசவும், எழுதவும் நான் கற்றுக்கொள்வதில் பெருமை அடைகிறேன் என்று நெல்லையில் நடந்த தமிழ் வளர்ச்சித்துறை ஆட்சிமொழி கருதரங்கத்தில் கலெக்டர் விஷ்ணு கூறினார்.
கருத்தரங்கம்
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நேற்று 2-வது நாள் கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி பேசினார்.
மேலும் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக விளங்கிய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விரல்ரேகை தனிப்பிரிவு அலுவலகத்திற்கு கேடயம் பரிசு வழங்கினார்.
பெருமை
இதைத்தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
தமிழ் மொழி என்பது மிகப் பழமையான மொழி. தமிழ் பேசவும், எழுதவும் நான் கற்றுக்கொள்வதில் பெருமை அடைகிறேன். மொழி தான் ஒரு நாட்டின் அடையாளமாகும். உலகின் பல்வேறு தேசங்களில் ஆட்சி மொழியாக உள்ள தமிழ் மொழியின் சிறப்புகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மொழியை ஒவ்வொருவரும் நேசித்து பேச வேண்டும். அரசு அலுவலங்களில் எல்லா கோப்புகளையும் தமிழ் மொழியிலேயே பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மண்டல தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சுந்தர் மற்றும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






