கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரிகளான கேரளாவை சேர்ந்த பிரேம், விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த புகழேந்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நபர்கள், கஞ்சாவை கடத்திக்கொண்டு வந்து விற்பதும், பள்ளி- கல்லூரிகளுக்கு அருகில் நின்றுகொண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சப்ளை செய்வதை தடுக்கும் வகையிலும் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தீவிரமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள், கஞ்சா பழக்கத்தை கைவிட வேண்டும். ஒருமுறை இந்த பழக்கத்திற்கு அடிமையானால் அதிலிருந்து வெளியே வர கண்டிப்பாக முடியாது. அவர்களது எதிர்கால வாழ்க்கையே சீரழிந்து விடும். எனவே இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பிடித்து கைது செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் கஞ்சா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com