அரசு பள்ளிக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

ஊட்டி அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து கதவுகள், பதிவேடுகளை சேதப்படுத்தி கரடி அட்டகாசம் செய்தது.
ஊட்டி
ஊட்டி அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து கதவுகள், பதிவேடுகளை சேதப்படுத்தி கரடி அட்டகாசம் செய்தது.
கரடி அட்டகாசம்
ஊட்டி அருகே கடசோலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்பட்டது. அப்போது 2 வகுப்பறைகளின் கதவுகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறையின் கதவு முற்றிலும் உடைந்து இருந்தது.
உடனே பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்த போது, பள்ளிக்குள் கரடி புகுந்து அட்டகாசம் செய்தது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் அறையில் இருந்த மேஜையை கரடி சேதப்படுத்தியது. மேலும் அங்கு பீரோவை திறந்து பதிவேடுகளை வெளியே எடுத்து போட்டதால் சிதறி கிடந்தது. இதில் சில பதிவேடுகள் நாசமானது. பின்னர் சமையல் அறைக்குள் நுழைந்த கரடி அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்றும், சிதறியும் சேதப்படுத்தி உள்ளது.
கோவிலுக்குள் புகுந்தது
இது தவிர வகுப்பறைகளை அசுத்தம் செய்து விட்டு சென்றிருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் உள்ளே அமர முடியவில்லை. அவர்கள் வளாகத்தில் தரையில் அமர்ந்து இருந்தனர். மேலும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊட்டி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டனர். அவர்கள் கரடி வந்து சென்றதை உறுதி செய்தனர்.
இதுமட்டுமின்றி அதே பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குள் புகுந்த கரடி கதவை உடைத்து சேதம் ஏற்படுத்தியது. மேலும் மற்றொரு பகுதியில் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






