மீனவரின் உடலை கொண்டுவரக்கோரி மனைவி மனு

மீனவரின் உடலை கொண்டுவரக்கோரி மனைவி மனு கொடுத்தார்.
ராமநாதபுரம்,
திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினம் மீனவர் தெருவை சேர்ந்த கண்ணுச்சாமி என்பவரின் மனைவி வனிதா என்பவர் தனது 3 குழந்தைகளுடன் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கண்ணீர் மல்க அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் கண்ணுச் சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக குவைத்நாட்டிற்கு கடலில் மீன்பிடி தொழிலுக்கு சென்றார். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி குவைத் நாட்டில் இருந்து என்னை அழைத்து எனது கணவர் கடல் தொழிலுக்கு சென்றபோது கடலில் விழுந்து விட்ட தாகவும் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் கதறி துடித்து கொண்டிருந்தபோது மீண்டும் அழைத்து இறந்தநிலையில் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். எனது கணவர் இறந்த செய்தி அறிந்து நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளோம். எனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வந்து அவரின் இறுதி சடங்கினை எனது பிள்ளைகளை வைத்து செய்ய உதவ வேண்டும். கணவனை இழந்த 3 குழந்தைகளுடன் தவிக்கும் எனக்கு வாழ்வாதாரத்திற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story






