

ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலா தலமான ஏலகிரிமலையில் அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு, புகை பிடித்து அதை அணைக்காமல போட்டு விடுவதால் சருகுகள் மூலம் தீப்பற்றி விடுகிறது. கடந்த மாதத்தில் ஏலகிரி மலையில் 3 முறை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.
இந்தநிலையில் நேற்று மாலை மலையடிவாரத்தில் ஊசி நாட்டான் வட்டம், அய்யப்பன் வட்டம், சுரங்கன் வட்டம் ஆகிய பகுதிகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பரவி மலையின் உச்சி பகுதிவரை சென்றது. இதனால் 300 வேப்பங்கன்று, 300 புங்கன் கன்று, அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.