பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்


பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 April 2022 11:46 PM IST (Updated: 4 April 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

நூல் விலையை கட்டுப்படுத்த பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் மனு கொடுத்தார்.

திருப்பூர்
நூல் விலையை கட்டுப்படுத்த பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் மனு கொடுத்தார்.
மத்திய மந்திரியிடம் மனு
பஞ்சு, நூல் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் நேற்று டெல்லியில் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இணைந்து தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த 18 மாதங்களாக பஞ்சு விலையை காரணம் காட்டி நூல் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆடைகளின் விலையை உயர்த்த முடியவில்லை. பையர்களும் விலையை உயர்த்திக்கொடுப்பதற்கு தயங்குகிறார்கள்.
இறக்குமதி வரியை நீக்க வேண்டும்
இதன்காரணமாக வெளிநாட்டு ஆர்டர்களை பெற முடியாத சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சு விலையை கட்டுப்படுத்தினால் மட்டுமே நூல் விலை கட்டுக்குள் வரும். இதனால் வெளிநாட்டில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கம் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் 40 லட்சம் பேல்களை உடனடியாக இறக்குமதி செய்து நூற்பாலைகளுக்கு வழங்கினால் நூல் விலையை சமாளிக்க முடியும். உள்ளூர் விவசாயிகளை பாதிக்காத வகையில் பஞ்சு விலையை கட்டுப்படுத்த உதவி செய்ய வேண்டும்.
பஞ்சை பதுக்கி வைத்து வியாபாரம் செய்யாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னலாடை உற்பத்தியாளர்களிடம் பணப்புழக்கம் என்பது குறைந்து விட்டது. இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்ள, கொரோனா காலகட்டத்தில் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலமாக அவசர கால கடன் வழங்கியதைப்போல் தற்போது பிணையம் இல்லாமல் அவசர கால கடன் உதவி வழங்கினால் மிகவும் பயன் உள்ளதாக அமையும். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் முடியும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மனோஜ் பட்டோடியா, ஏ.இ.பி.சி. தலைவர் நரேந்திர கோயங்கா, தென்னிந்திய நூற்பாலைகள் சங்க தலைவர் ரவிசாம் ஆகியோர் உடனிருந்தனர்.
1 More update

Next Story