

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்து மாடு பலியானதால் பெண்கள் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மின்சாரம் தாக்கி பசுமாடு பலி
சாத்தான்குளம் அருகே நொச்சிக்குளத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வந்தது. மேலும் உயர்கோபுர மின் கம்பிகளும் அபாய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த அந்தோணிகுமார் மகன் வெளிங்ஸ்டன் (வயது 36) என்பவரது பசு மாடு மேய்ச்சலுக்காக நேற்றுகாலையில் வயல் வெளிக்கு சென்றது. அந்த பகுதியில் மினகம்பி ஒன்று திடீரென்று அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு துடிதுடித்து பலியானது.
பெண்கள் சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த நொச்சிக்குளம் கிராம பெண்கள் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும், பலியான மாட்டுக்கு நஷ்ட ஈடு கேட்டும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
உடன் தகவல் அறிந்து சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வருவாய் ஆய்வாளர் ஜெயா, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் கிராம மக்கள் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிபார்த்து சீரான மின்சாரம் வழங்கிட வேண்டும்.
இப்பகுதி நிரந்தர ஒயர்மேன் நியமிக்க வேண்டும் எனவும், பலியான மாட்டுக்கு நஷ்டஈடு தர வேண்டும் என முறையிட்டனர். உடன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.