

மீன்சுருட்டி,
முன்விரோதம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காக்கனேரி வேம்பக்குடியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 85). இவருக்கும் இவரது தம்பி கோபால் என்பவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 25-ந் தேதி மாலை காசிநாதன் சைக்கிளில் வேம்பங்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த அவரது தம்பி மகன் சண்முகநாதன் என்கிற மொட்ட பாஸ் (வயது 33) மோட்டார் சைக்கிளில் சென்று காசிநாதனை சைக்கிளில் இருந்து உதைத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
கைது
இதில் பலத்த காயமடைந்த காசிநாதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி காசிநாதன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காசிநாதன் மருமகள் செந்தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.