புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் முககவசம் கட்டாயம்


புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் முககவசம் கட்டாயம்
x

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் உள்அரங்கம், ஏ.சி. அறைகளில் இருப்போர் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கொரோனா வைரஸ்

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி ஆலோசனை

புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, மன்சூக் மாண்டவியா,சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தநிலையில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

பசவராஜ்பொம்மை தலைமையில் கூட்டம்

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் அத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பரிசோதனைகள்

சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் இங்கு அந்த வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் குளுகுளு வசதி கொண்ட ஏ.சி. அறைகள், உள்அரங்குகளில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 3 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். மாநிலத்தில் தற்போது தினசாி 4 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சளி, காய்ச்சலுடன் ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

ஆராய்ச்சி முடிவுகள்

கொரோனா புதிய வைரஸ் வேகமாக பரவும் தன்மையை கொண்டது. அதுபற்றி இன்னும் ஆராய்ச்சி முடிவுகள் வர வேண்டியுள்ளது. வரும் நாட்களில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்போம்.

தகுதியான அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் ஒதுக்கப்படும். சிறப்பு முகாம்களை நடத்தி பூஸ்டர் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. அதே நேரத்தில் அரசு பிறப்பிக்கும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்படும். ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி மறுக்கும் நோக்கத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் வெளியிடப்படுவதாக காங்கிரசாா் குற்றம்சாட்டுகிறார்கள். கடந்த 3 மாதமாக அந்த யாத்திரை நடக்கிறது. அப்போது யாரும் வழிகாட்டுதலை வெளியிடவில்லையே?. தற்போது சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story