கேரளா: மதவழிபாட்டு கூட்டரங்கில் குண்டுவெடிப்பு - ஒருவர் பலி


தினத்தந்தி 29 Oct 2023 6:01 AM GMT (Updated: 29 Oct 2023 8:04 AM GMT)

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு இன்று காலை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் பங்கேற்று மத வழிபாடு செய்தனர்.

இந்நிலையில், மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் 3 முறை குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், மதவழிபாட்டு கூட்டரங்கில் நடந்த இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலை கண்டித்து கேரளாவில் நேற்று இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின்போது காசாமுனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த நிர்வாகி ஹலெட் மாஷல் காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story