100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம்: டெல்லிக்கு படையெடுப்போம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு


100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம்: டெல்லிக்கு படையெடுப்போம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
x

100 நாள் வேலைத்திட்ட நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதால் டெல்லிக்கு படையெடுப்போம் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதாக மேற்கு வங்காளம் பெயர் எடுத்துள்ளது. இருப்பினும், அந்த திட்டத்துக்காக மேற்கு வங்காளத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை பொறாமை மற்றும் பழிவாங்கும் அரசியலுக்காக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.6 ஆயிரத்து 907 கோடி நிதியை முடக்கி வைத்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கு வங்காள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீண்ட காலத்துக்கு இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். மக்களின் உரிமைக்காக போராட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். டெல்லியுடன் நேருக்குநேர் மோத தயாராகி விட்டோம்.

இந்த போராட்டத்தை டெல்லிக்கு எடுத்துச் செல்வோம். பாதிக்கப்பட்ட மக்கள் எழுதிய கடிதங்களுடன் டெல்லிக்கு படையெடுத்து செல்வோம். மக்களின் குரல், டெல்லியில் உள்ள தலைவர்களின் காதுகளை எட்டுவதை உறுதி செய்வோம். மத்திய அரசுக்கு அடிபணிய மாட்டோம். மத்திய அரசின் பழிவாங்கும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும். மேற்கு வங்காளத்துக்காகவும், அதன் மக்களுக்காகவும் உறுதியுடன் நிற்கிறோம். நீதி கிடைக்கும்வரை ஓய மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story