ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டியது: வெள்ளக்காடானது பெங்களூரு


ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டி தீர்த்ததால் பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது. குளம்போல் மாறிய குடியிருப்புகளில் இருந்து மக்கள் படகுகளில் மீட்கப்பட்டனர்.

பெங்களூரு: ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டி தீர்த்ததால் பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது. குளம்போல் மாறிய குடியிருப்புகளில் இருந்து மக்கள் படகுகளில் மீட்கப்பட்டனர்.

நீர் நிலைகள் நிரம்பின

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஜூன் மாதத்தில் பெரிதாக மழை பெய்யாவிட்டாலும், ஜூலை மாதம் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதே போல் தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதே போல் கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பின.

கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து அந்த நகருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலை (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் அரசு மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாகவும் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தன. இதுகுறித்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. அதிகாலை 5 மணி வரை பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது.

உணவு பொட்டலங்கள்

பொதுவாக பெங்களூருவில் ஒரு பகுதியில் மழை பெய்தால், மற்றொரு பகுதியில் மழை இருக்காது என்ற நிலை தான் உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் இரவு நகரம் முழுவதும் பரவலாக மழை கொட்டித்தீா்த்தது. குறிப்பாக மகாதேவபுரா, பொம்மனஹள்ளியில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. அதாவது 130 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரந்து விாிந்துள்ள பெல்லந்தூர் ஏரி முழுமையாக நிரம்பியது. அதில் இருந்து நீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து அடுக்குமாடி கட்டிடங்களை சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள ரெயின்போ லே-அவுட் வழக்கம் போல் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சர்ஜாப்புரா ரோடும் வெள்ளம் தேங்கி ஏரி போல் மாறிவிட்டது. அங்கு 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், அங்கு வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். மேலும் அங்கு வீடுகளில் இருந்த மக்களுக்கு பால், பிஸ்கட், பிரட் உள்ளிட்ட உணவு பொட்டலங்களை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சென்று வினியோகம் செய்தனர். சர்ஜாப்புரா-மாரத்தஹள்ளி சாலையில் கைகொண்டரஹள்ளியில் சன்னி புரூக்ஸ் லே-அவுட் உள்ளது. அந்த லே-அவுட்டிலும் கனமழை பெய்து வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அங்கு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கிவிட்டன.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் கோரமங்களா, இந்திராநகர், எச்.ஏ.எல். உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. மான்யதா டெக் பார்க் பகுதியிலும் மழை நீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அங்குள்ள முக்கிய சாலை நீரில் மூழ்கியது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானதால் மென்பொருள் என்ஜினீயர்கள் நிறுவனங்களுக்கு உரிய நேரத்திற்கு வர முடியாமல் தவித்தனர்.

மேலும் சில்க் போர்டு-மாரத்தஹள்ளி சாலையிலும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்று போக்குவரத்திற்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது. அந்த சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதனால் வாகன ஓட்டிகள் ஆக்ரோஷம் அடைந்தனர். அதிக எண்ணிக்கையில் மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ள அந்த சாலையில் ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கஷ்டப்பட்டனர். இதையடுத்து பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்தன. மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

முடங்கி கிடந்தனர்

மான்யதா டெக் பார்க்கின் பின் பகுதியில் உள்ள ராமையா லே-அவுட் நீரில் மூழ்கியது. இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வெளியே வர முடியாமல் முடங்கி கிடந்தனர். அந்த வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கி கொள்ளும் அபாயம் இருந்ததை

அடுத்து அங்குள்ள பிரதான சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி கட்டிடமும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் அந்த பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாரத்தஹள்ளியில் வெள்ளம் தேங்கி நின்றுள்ளதால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரில் மிதக்கின்றன. மொத்தத்தில் பெங்களூரு புறநகர் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

130 மில்லி மீட்டர் மழை கொட்டியது

கர்நாடகத்தில் மழை பெய்த விவரங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பெங்களூரு புறநகரில் உள்ள நெலமங்களாவிலும் அதே அளவுக்கு மழை பெய்தது. பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் 120 மில்லி மீட்டர், பெங்களூரு சர்வதேச விமான நிலைய பகுதியில் 110, ஐ.டி.சி. ஜாலாவில் 100, ஒசக்கோட்டையில் 90, எலகங்காவில் 80, எலக்ட்ரானிக் சிட்டி, ஜி.கே.வி.கே. பகுதியில் 70, தேவனஹள்ளி, சோம்புரா, 60, ஞானபாரதி, எம்ப்ரி, உத்தரஹள்ளியில் தொட்டபள்ளாபுரா, 50 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் மாநில அளவில் பெங்களூருவில் தான் அதிகபட்ச மழைபெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திடீர் மேக வெடிப்பா?

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் புறநகரில் உள்ள பல பகுதிகள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளன. மேக வெடிப்பு காரணமாக இந்த அளவுக்கு மழை பெய்திருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யவில்லை.

விதான சவுதாவுக்குள்ளும் புகுந்த மழை வெள்ளம்

கர்நாடகத்தில் அதிகார மையமாக விதான சவுதா திகழ்கிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த விதான சவுதாவிலும் நேற்று மழைநீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்டிடத்தின் உள்பகுதியில் தரை தளத்திற்கு கீழ் பகுதியில் உணவகம் உள்ளது. அங்கு ஊழியர்கள் காலையில் வந்து பார்க்கும்போது, அந்த உணவகத்திற்குள் வெள்ளம் தேங்கி நின்றது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு தேங்கிய நீரை மின் மோட்டார் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக அங்கு உணவு தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

குண்டும்-குழியுமாக மாறிய சாலைகள்

பெங்களூருவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், சாலைகள் படுமோசமாக மாறியுள்ளன. ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக அந்த குழிகள் மரண குழிகளாக மாறி வருகின்றன. சில பகுதிகளில் உள்ள குழிகள் முழங்கால் உயரத்திற்கு ஆழம் ஏற்பட்டுள்ளன.

இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகனங்களை ஓட்டும் மக்கள் உயிரை கையில் பிடித்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழிகளால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. வேகமாக செல்ல வேண்டிய வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சில நேரங்களில் குழியை பார்த்ததும் இருசக்கர வாகன ஓட்டிகள் வண்டியை திடீரென திருப்புவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. அதனால் தற்காலிக ஏற்பாடாக சாலை குழிகளில் ஜல்லி கலவையை போட்டு சமப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கர்நாடக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 நாட்கள் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். அதாவது கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, வட கர்நாடகத்தில் பாகல்கோட்டை, பெலகாவி, பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, தென்மாவட்டங்களில் பல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்புரா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story