வணிக வரித்துறை அதிகாரிகள் 14 பேர் பணி இடைநீக்கம்


வணிக வரித்துறை அதிகாரிகள் 14 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 26 Nov 2022 9:09 PM GMT (Updated: 26 Nov 2022 9:36 PM GMT)

வணிகவரித்துறை அதிகாரிகள் 14 பேரை பணி இடைநீக்கம் செய்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் வணிக வரித்துறை மூலமாக அரசு பல கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் வணிகத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், வரி செலுத்தும் நபர்களுடன் கைகோர்த்து கொண்டு, அவர்களிடம் குறைந்த அளவு வரியை பெற்றுக் கொண்டு அரசுக்கு மோசடி செய்து வந்தனர். இதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து, அதிகாரிகள் லஞ்சம் பெறுவது, தொழில்அதிபர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வணிக வரி செலுத்துவதில் தள்ளுபடி உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி வணிக வரித்துறை கமிஷனர் சிகாவுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், வணிக வரித்துறை கமிஷனர் சிகா விசாரணை நடத்தி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் அறிக்கை அளித்திருந்தனர். அதில், வணிக வரித்துறை அதிகாரிகள் 8 பேர், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 14 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதுடன், லஞ்சம் வாங்கி வந்தது பற்றியும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அந்த 14 அதிகாரிகளையும் பணி இடைநீக்கம் செய்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் உத்தரவின் பேரில், வணிக வரித்துறை கமிஷனர் சிகா நடவடிக்கை எடுத்து உள்ளார்.


Next Story