டெல்லி 11 பேர் தற்கொலையில் அதிரவைக்கும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது


டெல்லி 11 பேர் தற்கொலையில் அதிரவைக்கும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது
x
தினத்தந்தி 2 July 2018 9:23 AM GMT (Updated: 2 July 2018 9:23 AM GMT)

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் போலீஸ், அங்கிருந்து தற்கொலைக்கான காரணம் மற்றும் அதற்கான வழிமுறைகள் என்ன என்பது அடங்கிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். 

தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி (வயது77) தரையில்படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். 10 பேர் கண்களையும், வாயையும் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விசாரணையில் அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, நாராயண் தேவி குடும்பத்தார், வித்தியாசமான வழிபாட்டு முறையை கடைபிடித்துள்ளனர், அதற்காகவே வீட்டுக்குள் சிறிய கோயிலை கட்டிவைத்து வழிபாடு செய்துள்ளனர். இப்போது கடவுளிடம் சென்றவிட இவ்வாறு தற்கொலையை செய்து உள்ளனர் என்று தெரிகிறது.

அவர்களின் வழிபாடு முறையானது மிகவும் புதிராகவும், அதிக மூடநம்பிக்கை கொண்டதாகவும் இருந்து உள்ளது. நாராயண் தேவியின் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள் என்பதால் மூடநம்பிக்கையை எப்படி பின் தொடர்ந்தார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது.
அவர்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம்தான் என ஒத்துக்கொள்ளும் உறவினர்கள் மற்றும் அண்டைய வீட்டார்கள் மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்பதை நம்ப மறுக்கிறார்கள். இந்நிலையில் விசாரணையின் போது சிக்கிய கடிதம் மூலம் அதிர்ச்சிக்கரமான தகவல் வெளியாகியுள்ளது. சொர்கத்தை அடையும் வழி என்று மொத்தமாக நள்ளிரவு தற்கொலை செய்துள்ளனர். 

 தற்கொலை செய்வதற்கு முன் சனிக்கிழமை இரவு வீட்டில் உணவு சமைக்காமல் கடையில் இருந்து உணவு வாங்கிவந்து சாப்பிட்டுள்ளனர்.

அவர்கள் ஓட்டலில் உணவிற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர், உணவு வழங்கப்பட்டு உள்ளது. இக்காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதற்கு பின்னர் அவர்களுடைய வீட்டிற்குள் யாரும் செல்லவுமில்லை, வெளியே வரவுமில்லை.

 வீட்டில் வளர்த்து வந்த நாயை மொட்டைமாடியில் கட்டிவிட்டு தற்கொலை செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட டைரியில் சொர்கத்தை அடையும் வழி என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. 

* வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் தற்கொலை செய்ய வேண்டும்.

* தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறு பயன்படுத்தலாம். 

* வீட்டில் இருக்கும் பாட்டியால் நிற்க முடியாது, அவரை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.

* தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை இருக்க வேண்டும். 

* தற்கொலை செய்யும் போது அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது.

 * தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய்,கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்கத்தை அடைய முடியும்.

* தற்கொலை செய்வதற்கு முன்னதாக 7 நாட்கள் வழிமுறைகளை கடினமான முறையில் கடைபிடிக்க வேண்டும், விரத முறையில் இருந்து தவறக்கூடாது. அனைவருக்கும் ஒரே எண்ணம் இருக்க வேண்டும், அப்படியிருந்தால் நம்முடைய இலக்கில் பலன் கிடைக்கும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்புகள் அனைத்தும் கடந்த மாதம் 26-ம் தேதி எழுதப்பட்டு, ஜூன் 30-ம் தேதி இரவு அனைவரும் கடவுளை சந்திக்கச் செல்கிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள். 22 பேருக்கு பார்வைகிடைக்க நாங்கள் உதவியாக இருப்போம். இது எங்களுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளனர்.


Next Story