கொரோனாவுக்கு எதிரான போரை வெற்றி பெற செய்யுங்கள்; பொதுமக்களுக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள்


கொரோனாவுக்கு எதிரான போரை வெற்றி பெற செய்யுங்கள்; பொதுமக்களுக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 April 2021 1:17 AM GMT (Updated: 14 April 2021 1:17 AM GMT)

ஏழைகளுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கொரோனாவுக்கு எதிரான மீண்டும் ஒரு போரை வெற்றி பெற செய்யுங்கள் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று இரவு சமூக ஊடகம் வாயிலாக பேசியதாவது:-

மீண்டும் ஒரு போர்
‘கொரோனா வைரசுக்கு எதிரான போர் மீண்டும் தொடங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மாநில சுகாதார உள்கட்டமைப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.இந்நிலையில், ஏப்ரல் 14-ந் தேதி (இன்று) இரவு 8 மணி முதல், மே 1-ந் தேதி காலை 7 மணி வரை 15 நாட்களுக்கு மாநிலம் தழுவிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதை நான் முழு ஊரடங்கு என்று சொல்ல மாட்டேன். கட்டுப்பாடுகளை வெற்றிகரமாக அமல்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். மீண்டும் ஒருமுறை கொரோனா பரவலுக்கு எதிரான போர் தொடங்கி உள்ளது. இதை வெற்றி பெற செய்ய வேண்டும். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஆக்சிஜன் தேவை
அதேவேளையில், அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி மருந்துக்கும், மருத்துவ ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் விமானப் படை விமானங்கள் மூலம் மத்திய அரசு ஆக்சிஜன் வினியோகம் செய்ய வேண்டும்.

இலவச கோதுமை, அரிசி
மாநிலத்தில் மக்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில், ஏழைகள் மற்றும் தேவையுள்ளோருக்கு இந்த ஒரு மாதத்திற்கு தலா 3 கிலோ கோதுமையும், 2 கிலோ அரிசியும் அரசால் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story