கேரளாவில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை


கேரளாவில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை
x
தினத்தந்தி 20 April 2021 1:11 PM GMT (Updated: 20 April 2021 1:11 PM GMT)

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2-வது அலை காரணமாக அங்கு நேற்று மட்டும் 13 ஆயிரத்து 644 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் கேரளாவிலும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதற்கிடையே கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் விழாவை கொண்டாட வேண்டும் என்று பக்தர்களும் கோவில் நிர்வாகிகளும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து கேரள அரசின் தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் அரசு வெளியிட்ட அறிவிப்பில் “திருச்சூர் பூரம் விழாவை சம்பிரதாய சடங்காக மட்டுமே கொண்டாட வேண்டும். விழாவில் பக்தர்கள் பங்கேற்கவோ, யானைகள் அணிவகுப்பு, குடை மாற்ற சடங்குக்கு அனுமதி இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் திருச்சூர் பூரம் விழாவின் போது நடைபெறும் போட்டி வாணவேடிக்கையும் ரத்து செய்யப்பட்டது.


Next Story