கொரோனா குறித்த உரைகளையே நாடுகின்றனர்; பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மக்கள் விரும்பவில்லை; மம்தா பானர்ஜி காட்டம்


கொரோனா குறித்த உரைகளையே நாடுகின்றனர்; பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மக்கள் விரும்பவில்லை; மம்தா பானர்ஜி காட்டம்
x
தினத்தந்தி 25 April 2021 8:28 PM GMT (Updated: 25 April 2021 8:28 PM GMT)

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மக்கள் விரும்பவில்லை எனவும், கொரோனா குறித்த உரைகளையே அவர்கள் நாடுவதாகவும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி காட்டமாக கூறியுள்ளார்.

‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்துக்கான உரையை நேற்று அவர் ஆற்றினார். இதில் அவர் இந்தியா எதிர்கொண்டு வரும் கொரோனாவின் 2-வது அலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.ஆனால் பிரதமரின் இந்த மன் கீ பாத் நிகழ்ச்சியை மக்கள் விரும்புவதில்லை என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சாடியுள்ளார். 

முர்ஷிதாபாத் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மத்திய படைகள்
உங்கள் (பிரதமர்) மன் கீ பாத் உரையை யார் விரும்புகிறார்? கொரோனா குறித்த உரைகளைதான் மக்கள் தற்போது விரும்புகின்றனர். 1000 பேர் கொண்ட ஒரு கூட்டத்தில் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட, மற்ற அனைவரும் பாதிக்கப்படக்கூடும்.ஆனால் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து 2 லட்சம் மத்திய படைகள் மேற்கு வங்காளத்துக்கு வந்துள்ளனர். இதில் ஏராளமானோர் தங்களை அறியாமலேயே வைரசை சுமந்து வந்திருக்கக்கூடும். ஏனெனில் யாருக்கும் தேர்தல் கமிஷன் சார்பில் வைரஸ் பரிசோதனை செய்யப்படவில்லை.இதைப்போல வெளிமாநிலங்களில் இருந்து மந்திரிகள் உள்பட சுமார் 1 லட்சம் பா.ஜனதா தொண்டர்கள் தேர்தலுக்காக மேற்கு வங்காளம் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஓட்டல்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநிலத்தில் தொற்று அதிகரிக்க பெரும் பங்காற்றி இருக்கிறார்கள்.

குண்டர்களை அனுப்பினர்
எனவே இந்த மத்திய படைகள் மற்றும் பா.ஜனதா தொண்டர்களை விட்டு இடைவெளிவிட்டு மக்கள் இருக்க வேண்டும். வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் என தாய்மார்களும், சகோதரிகளும் தெரிவிக்க வேண்டும்.மாநிலத்தில் கடைசி சில தேர்தல்களை ஒன்றாக நடத்துமாறு தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் அதற்கு செவிமடுக்கவில்லை. ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் மோசடி செய்வதற்கு பா.ஜனதா சிறப்பு திட்டங்களை வைத்திருந்தது எனக்கு தெரியும். 6-வது கட்ட தேர்தலில் வேறு பகுதிகளை சேர்ந்த குண்டர்களை மத்திய படையினருடன் இணைத்து நமது கட்சி தொண்டர்களின் வீட்டுக்கு அனுப்பியிருந்தனர்.

தடுப்புக்காவலுக்கு திட்டம்
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தடுப்புக்காவலில் வைக்க தேர்தல் பார்வையாளர்கள் திட்டமிட்டனர். அது சட்டவிரோத காவலாக இருக்கும். எனவே ஏதாவது அழைப்பு வந்தால் யாரும் போலீஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம். உங்களை ஓட்டுப்போடுவதில் இருந்து தடுக்க இந்த சதி நடக்கிறது. எதிர்காலத்தில் தேர்தல்களை மிகவும் ஜனநாயக முறையில் நடத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். இது தொடர்பாக ஏற்கனவே நான் மூத்த வக்கீல்களுடன் பேசியிருக்கிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Next Story