பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா பாதிக்கப்பட்ட மணமகனை திருமணம் செய்த இளம்பெண்


பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா பாதிக்கப்பட்ட மணமகனை திருமணம் செய்த இளம்பெண்
x
தினத்தந்தி 26 April 2021 6:39 AM GMT (Updated: 26 April 2021 6:39 AM GMT)

மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு கவச உடை அணிந்து மணமகனை இளம்பெண் திருமணம் செய்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத்மோன் என்பவருக்கு அபிராமி என்ற இளம்பெண்ணுக்கும் 2021 ஏப்ரல் 25-ம் தேதி திருமணம் செய்ய கடந்த ஆண்டே பெற்றோர் முடிவு செய்திருந்தனர். 

மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்துவந்த சரத்மோன் தனது திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா திரும்பினார். கேரளா திரும்பியபோதும் சரத்மோன் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.

ஆனால், சரத்மோன் மற்றும் அவரது தாயார் ஜிஜிமொல் ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், சரத்மோன் மற்றும் அபிராமிக்கு திட்டமிட்ட நாளில் (ஏப்ரல் 25) திருமணம் செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர். 

இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை மணப்பெண் அபிராமி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது.

குடும்பத்தினரின் வேண்டுகோளையடுத்து, சரத்மோன் - அபிராமி தம்பதியினர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் (பிபிஇ) நேற்று சரத்மோன் சிகிச்சை பெற்று வரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அபிராமி வந்தார். அங்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சரத்மோனை அபிராமி திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட சரத்மோன் -  அபிராமி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து சரத்மோன் குணமடைந்த பின்னர் சரத்மோன் - அபிராமி தம்பதியர் தங்கள் இல்லற வாழ்வை தொடங்குவார்கள் என புதுமண தம்பதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Next Story